புயல் விலகவும் புயல் வேகத்தில் சீராகும் போக்குவரத்து! சென்னையில் வழக்கம்போல ஓட தொடங்கிய பேருந்துகள்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஓரளவுக்கு வடிந்த நிலையில், போக்குவரத்து சீராகி வருகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின. தற்போது இரவு முதல் மழை ஓய்ந்துள்ள நிலையில், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனாலும் முழுமையாக வெள்ள நீர் வடிய இன்னும் 20 நேரத்திற்கு மேலாகும் என கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று முழுவதும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை முழுவதும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வந்தன.
சாலைகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலைகளில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து குறைக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவில் தான் இயக்கப்பட்டன. . 100 அடி சாலை முழுவதும் நீர் தேங்கியிருப்பதால் மீனம்பாக்கம், தாம்பரம் சாலைகளை தவிர்த்து, கோயம்பேட்டில் இருந்து போரூர் உள்ளிட்ட பகுதிகள் வாயிலாக சில பேருந்துகள் இயக்கப்பட்டன.
பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால், பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையை விட்டு புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து இருப்பதால் சென்னையில் மழை அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இன்று பல பகுதிகளிலும் முழுதாக மழை ஓய்ந்துள்ளது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளமும் வடியத் தொடங்கியுள்ளது. அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் முழுமையாகவே வடிந்துவிட்டது. நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளதால் மேடான பகுதிகளான கோயம்பேடு, அண்ணா நகர், மவுண்ட் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதையடுத்து இப்போது அந்த பகுதிகளில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல வெள்ள நீர் வடிந்த பல பகுதிகளில் போக்குவரத்து திரும்ப தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீராகியுள்ளது.
தாம்பரம் முதல் கோயம்பேடு, கிண்டி வழியாக அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் வழக்கம்போல பேருந்துகள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள், தங்கள் வாகனங்களிலும் இந்தச் சாலைகளில் பயணித்து வருகின்றனர். பிரதான சாலைகளில் மழைநீர் வடிந்துள்ள நிலையில், உட்புறச் சாலைகளில் மட்டுமே தற்போது மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிடங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications