கொளுத்தும் வெயில்.. தரமில்லாத கேன் குடிநீர் விற்றால் அபராதம்.. உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறும் கடைகள், ஆலைகள் மீது தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமில்லாத கேன் வாட்டர் விற்பனை செய்யப்பட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேன் வாட்டரில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
தமிழ்நாட்டில் குடிநீர் கேன் வாட்டர் நிறுவனங்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். தரம் மற்றும் முறையாக அனுமதி இல்லாமல் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, கேன்களை 30 முறைகளுக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்றும், கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை பயன்படுத்திய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்து வரும் கடைகள் மீதும், விதிகளைப் பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 ஆயிரம் அபராதம்
மேலும், விதிகளை மீறும் கடைகள், ஆலைகள் மீது தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன் குடிநீரில் 1 லிட்டருக்கு கால்சியம் 10 முதல் 75 மில்லி கிராம் வரையும், மக்னீசியம் 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் அளவில் இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மீது பலமுறை புகார் வரும் பட்சத்தில் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான புகார்கள் பெறப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications