இன்று மழை.. நாளை பனிமூட்டம்.. கூடவே வெப்பமும் இருக்காம்.! குழப்பும் கிளைமேட்.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே எங்கும் பெரியளவில் மழை இல்லாத நிலையில், இன்று தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த நவ.- டிச காலகட்டத்தில் பருவமழை சமயத்தில் நல்ல மழை பெய்தது. வடமாவட்டங்களுக்கும் சரி தென்மாவட்டங்களுக்கும் சரி தமிழகத்தில் நல்ல மழை வெளுத்து வாங்கியது.

பருவமழை முடிவுக்கு வந்த பிறகு, மெல்ல வெயில் ஆரம்பித்தது. கடந்த சில காலமாகவே தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் தாண்டிவிட்டது.
வெப்பம்: இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக வானிலை மையம் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருக்கிறது. அங்கு ஒரே நாளில் 98.24 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மழை எங்கே: இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று பிப். 16ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளைய தினம் பிப். 17ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் பிப். 18 முதல் பிப். 22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
சென்னையில் கிளைமேட் என்ன: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை: மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இன்று பிப். 16 மற்றும் நாளை பிப்.17 தேதிகளில் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications