தென் மாவட்டங்களில் இனி சம்பவம் தான்.. 21 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! சென்னையில் எப்படி?
சென்னை: தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் சென்னை, கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

நேற்று முன்தினம் மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்தது. நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்தது. வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.
இதேபோன்று, கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மைய அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று நாளை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் எப்படி?: சென்னையை பொறுத்தவரை இன்று பெரிய அளவில் மழை இருக்காது என்றே கூறப்பட்டுள்ளது. எனினும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications