சென்னை முதல் திருநெல்வேலி வரை.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. குடையை ரெடியா வச்சுக்கோங்க!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் திருநெல்வேலி வரை 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் நேற்று கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று நள்ளிரவில் சென்னையிலும் மழை கொட்ட ஆரம்பித்தது. இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரைக்குள் 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து இருந்தது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்தது.
இதேபொன்று நாளை 15 ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையையும், பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications