தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்! பொங்கல் அன்று தென் மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பொங்கல் தினத்தன்று தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. வெயில் அடித்து வந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், பொங்கல் தினத்தன்று தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி தென் மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் இன்று சனிக்கிழமை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் நாளை ஞாயிற்றுக்கிழமையும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் திங்கட்கிழமை தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை பொங்கல் அன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் பனி மூட்டமும் அதிகமாக இருக்கும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications