மீண்டும் சுத்துப்போடும் மழை மேகங்கள்.. இந்த மாவட்டங்கள் எல்லாம் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், நாளை மீண்டும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையுடன் பருவமழை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் பரவலாக வறண்ட வானிலைதான் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உறைபனி குளிர் நிலவி
வருகிறது. இந்நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜன. 30) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வரும் 31 முதல் பிப். 2ம் தேதி வரை தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். பிப். 3ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இரவு அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மறுபுறம் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
உதகையில் வழக்கமாக ஆண்டு தோறும், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி நிலவும். இந்த ஆண்டு உறைபனி லேட்டாக தொடங்கினாலும், தீவிரமாக நிலவி வருகிறது. தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் புற்கள் வெண்பனியால் போர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகாலை வேலையில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மட்டுமல்லாது தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவற்றில் உள்ள தாவரங்கள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டிருக்கின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதாலும், பகல் நேரங்களில் அதிக வெப்பம் இருப்பதாலும் தாவரங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வடமாநிலங்களான டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவற்றில் பனிமூட்டம் கடுமையாக இருக்கிறது. எனவே ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications