காஞ்சிபுரம் டூ ராமநாதபுரம்.. 6+5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை! இன்றைய வெதர் அப்டேட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது மதியம் 1 மணியளவில் 6 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். இதே சிவகங்கை, ராமநாதபுதம், நாகை, திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்" என கூறியுள்ளது.
முன்னதாக இன்று காலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்" என்று கூறியிருந்தது.
அதேபோல சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications