விழுப்புரம் டூ குமரி.. வங்கக்கடல் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெதர் அப்டேட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது மாலை 4 மணியளவில் 11 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ராமநாதபுரம், நாகை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, குமரியில் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்" என கூறியுள்ளது.
முன்னதாக இன்று காலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்று காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்"












Click it and Unblock the Notifications