அடுத்த ஒரு மணி நேரம்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் மழை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயில் நீடிக்கும் என்றும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேனும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார். நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலை தணிய வைக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறிய அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வேலுர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை பல்லாவரம் பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications