கருக்கும் மேகங்கள்.. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அரபி கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் இரண்டும் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 55 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
அதேபோல தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளது. இது தவிர தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாராதீப் நகருக்கு தெற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் டிகா நகரத்துக்கு தெற்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதையொட்டியுள்ள மேற்கு வங்ககடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகரும்.
அரபி கடலை பொறுத்த அளவில் அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ்' புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை மறுநாள் ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
அதாவது, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் மிதமான மழையும், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications