அடுத்த 3 மணி நேரம் ரெடியா.. 6 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! காரைக்கால் மக்களும் கவனமா இருங்க
சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், "அடுத்த 3 மணி நேரம் (மாலை 4 மணி வரை) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை பெய்வதன் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சாலை வழுக்கும் நிலையில் இருக்கும். சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்படலாம். பழைய, பழுதான கட்டிடங்கள் சேதம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது." என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று காலை (18-10-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது 21-10-2023 வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
2. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 20-10-2023 வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
3. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
18.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.10.2023 முதல் 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications