அடுத்த 2 மணி நேரம்.. இடி, மின்னலுடன்.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் மழை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் தென்காசி, நெல்லை, குமரியிலும் மழை பெய்தது .

இந்த நிலையில் நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளையில் இருந்து மேலும் மழை அதிகரிக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.11ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications