அடுத்த ஒரு மணி நேரம்.. நெல்லை + தூத்துக்குடி + குமரி மாவட்டங்கள் டார்கெட்.. வெளுக்க போகும் மழை!
சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையிலும் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துவிட்டது. எனினும் தமிழகத்தில் இன்னும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக காலை, மதியம், பிற்பகல் என விட்டு விட்டு கனமழை பெய்தது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை, ஆலங்குளம், கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மாலை நேரத்துக்கு பிறகு பெரிதாக மழை பெய்யவில்லை. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய 3 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் இன்று (01-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications