ஜில்லு ஜில்லுன்னு மழை கொட்டப்போகுது.. மறுபக்கம் வெப்பம் 3 டிகிரி வரை கூடுமாம்! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப்ரவரி 14 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 - 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications