கொளுத்தும் வெயிலுக்கு பிரேக்.. 25ம் தேதிக்கு பிறகு மழைக்கு சான்ஸ்.. ஜில் அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்படை விட 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 25 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
சென்னையில் கோடைக்காலம் தொடங்கியது போல் வெயில் அடித்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் லேசான பனி நிலவினாலும் மற்ற நேரங்களில் குறிப்பாக மதியத்திற்கு பிறகு வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் வெளியில் செல்பவர்கள் குடையை எடுத்து செல்கிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது.

6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் 2 முதல் 3 டிகிரி வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று 23-02-2025 மற்றும் நாளை 24-02-2025 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 25-02-2025 முதல் 01-03-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கும்
இன்று (23-02-2025) மற்றும் நாளை (24-02-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 25-02-2025 முதல் 27-02-2025 வரை மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 25-02-2025 முதல் 27-02-2025 வரை மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (23-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (24-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
* தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று (23-02-2025) எச்சரிக்கை ஏதுமில்லை.
* 24-02-2025 முதல் 27-02-2025 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* வங்கக்கடல் பகுதிகள்: இன்று (23-02-2025) எச்சரிக்கை ஏதுமில்லை.
* நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 25-02-2025 மற்றும் 26-02-2025 வரை தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 27-02-2025:தெற்கு அந்தமான் கடல்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications