சக்கரம் மாறி சுத்துதே.. ஒரே நேரத்தில் டபுள் கிளைமேட்.. குடையை மடக்காதீங்க..வெயில் + மழை தாக்க போகுது
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேசமயம், வெப்பமும் கொளுத்தும் என்று கூறி, அடுத்த 7 நாட்களுக்கான வானிலையை வெளியிட்டிருக்கிறது சென்னை வானிலை மையம். அந்தவகையில், வரும் ஒரு வாரத்துக்கான வானிலை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
ஆய்வுகள்: இதனிடையே, ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 21ம் தேதி வரை இந்த நிலை தொடரும்.
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஓரிரு நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம்.
அசவுகரியம்: வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் வெளியில் செல்வோருக்கு உடல்ரீதியாக அசவுகரியம் ஏற்படலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications