சென்னை மக்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறியது. சென்னை அருகே புயல் நிலை கொண்டிருந்தது. இதனால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது.

சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. சென்னைக்கு வடக்கே 190 கிலோமீட்டர் தொலைவு புயல் விலகி சென்றுள்ளது. இதனால் சென்னையில் இன்று காலையில் இருந்து மழை இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று வரை பெய்த கனமழையால் சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளமா தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே கனமழையின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்தேக்கங்களில் 98 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீர்தேக்கங்களின் 98 சதவீதம் நீர் நிரம்பிவிட்டதாக நீர்வளத் துறை கூடுதல் செயலர் தெரிவித்து இருந்தார்.
நேற்றைய நிலவரப்படடி செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து என்பது வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டது. அதோடு நீர் திறப்பு தொடர்பாக மக்களுக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு என்பது 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை ஏரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நள்ளிரவு முதல் மழை இல்லாததால் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு என்பது 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் என்பது 22.82 அடியாக உள்ளது. அதேவேளையில் ஏரிக்கான நீர் வரத்து என்பது 6 ஆயிரம் கனஅடியாக இருக்கிறது.
அதோடு கடந்த 24 மணிநேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் 20 செமீ மழை பதிவாகி உள்ளது. இருப்பினும் தற்போது மழை இல்லாத நிலையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications