சென்னையில் 2-வது நாளாக அதிகாலை மழைக்கு சான்ஸ்.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று அதிகாலையும் மழைக்கு உகந்த நேரமாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்கிறது. இந்த நிலையில் இன்றும்தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் வாரம் முழுவதுமே நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க தலைநகர் சென்னையில் நேற்று அதிகாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், போரூர், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை விழித்த பிறகுதான் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்து பலருக்கும் மழை வந்ததே தெரிந்தது.
பிறகு பகல்வேளைகளில் மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலையும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளர். தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கும்பகோணம், சீர்காழி, பரங்கிபேட்டை, சிதம்பரம் ஆகிய பகுதிகள் நல்ல மழையை பெற்றுள்ளன.
மேகக்கூட்டங்கள் அரியலூர், பெரம்பலூர் நோக்கி நகர தொடங்கியுள்ளன. சென்னையில் மீண்டும் காலை நேரத்தில் மழை பெய்வதற்கு உகந்த நேரமாக உள்ளது. சென்னையில் அடுத்தடுத்து இரண்டாவது நாளாக காலை நேரத்தில் மழை பெய்யுமா...பார்க்கலாம்.. என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications