சென்னைக்கு சம்பவம் இருக்கு.. வங்கக்கடலில் புயல் சின்னம்! இந்திய வானிலை மையம் வார்னிங்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் வலு பெற்றால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு பகுதிகள் என்பது புயலுக்கான தொடக்க நிலையாகும். இது படிப்படியாக 4 நிலையாக வளர்ந்து, இறுதியில் புயலாக மாறுகிறது.
1. காற்றழுத்த தாழ்வுப் பகுதி
2. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
3. காற்றழுத்த தாழ்வு மண்டலம்
4. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
5. புயல்
காற்று சூடாவதன் மூலம் லேசான நிலையை அடைகிறது. இதனால் இயல்பாகவே மேலே எழும்புகிறது. இப்படி நடக்கும் பகுதியில் அழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தம் குறைவாக இருப்பதால், மற்ற பகுதியிலிருக்கும் காற்று, இந்த இடத்தை நோக்கி வேகமாக நகரும். இதன் மூலம் அழுத்தம் சமநிலையை எட்ட முயற்சிக்கும். இப்படியாக அதிக அளவில் காற்றும், அத்துடன் சேர்ந்து மேகங்களும் ஓரிடத்தில் குவிந்து, சுழலாக மாறும். இங்கு காற்றின் வேகம் மணிக்கு 31 கி.மீ என இருக்கும்.
இந்த வேகம் அதிகரிக்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. அதாவது மணிக்கு 49 கி.மீ வேகத்தில், காற்று சுற்றும். இதில் அழுத்தம் இன்னும் குறையும்போது அதுவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இந்த கட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 61 கி.மீ என இருக்கும். இதன் மையப் பகுதியில் காற்றின் சுழற்றி தெளிவாக தெரியும். இது நிலைக்கொண்டிருக்கும் பகுதியில் கனமழை பரவலாக பெய்யும். இறுதியாக காற்றின் வேகம் 62 கி.மீக்கும் அதிகமாக போகும்போது அது புயலாக வலுப்பெறுகிறது.
புயல் உருவானால், அதன் கண் நன்கு தெரியும்படி இருக்கும். இது நிலைக்கொண்டிருக்கும் பகுதியில் காற்றின் வேகம் கடுமையாக இருக்கும். கனமழையும், வெள்ளமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications