சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக பதிவாகி வந்த நிலையில் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தை பொறுத்தவரை அதாவது இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பில், "வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று (22-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (23-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications