சென்னையை சுத்து போடும் மழை மேகங்கள்.. நைட் வெளியே போகும் போது கவனம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை சீசன் தொடங்கியது முதலே மழை பெய்து வருகிறது. இடையில் ஓரிரு வாரங்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கோவை, நீலகிரி என மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கூட ஓரளவுக்கு மழை பெய்தது.

இடையில் ஓரிரு வாரங்கள் பெரியளவில் மழை இல்லாமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
வெதர்மேன்: இதற்கிடையே இன்று சென்னையில் மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அடுத்த 1-2 மணி நேரத்தில் கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகள்) 2வது நாளாக மழை பெய்யும். இன்றும் வட மற்றும் மத்திய சென்னை பகுதிகள் மழை மேகங்கள் உள்ளன. அதேநேரம் தென் சென்னையின் சில பகுதிகளிலும் மழை பெய்யும். பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த மழையை அனுபவிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வானிலை மையம் இரவு 8 மணியளவில் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.
வானிலை மையம்: அதேபோல வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இன்று செப். 3 மற்றும் நாளை செப். 4ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப். 5 முதல் செப. 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications