திருவொற்றியூர் டூ திருவல்லிக்கேணி.. சென்னையில் காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தீபாவளி விடுமுறை என்பதால் இன்று சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
நவம்பர் டிசம்பர் வந்தாலே சென்னை மக்களுக்கு இனம்புரியத பயம் பிடித்துக்கொள்ளும். அச்சத்திற்கு காரணம் மழைதான். தமிழ்நாட்டிற்கு ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை மழைப்பொழிவை கொடுக்கிறது. சென்னையிலும், இந்த காலத்தில் மழை பெய்யும். ஆனால் சென்னை மக்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள். இதுவே, வடகிழக்கு பருவமழை என்று வந்துவிட்டால் கொஞ்சம் ஜர்க் ஆகிவிடுவார்கள். ஏனெனில் இம்மழை போகிற போக்கில் ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றுவிடும்.

தற்போது இந்த சூழலில்தான் சென்னை மக்கள் இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 10-12 தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல, தீபாவளிக்கு முந்தைய தினத்தில் சென்னை அண்ணா நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் சுமார் 10 செ.மீ வரை மழை பெய்தது. இதனால் வில்லிவாக்கம் பாலத்தில் மழை நீர் தேங்கியது. இருப்பினும், கொஞ்ச நேரம் கழித்து மழை நின்றுவிட்டதால், வெள்ளம் வடிந்துவிட்டது.
இப்படி இருக்கையில், இன்னு சென்னையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. திருவொற்றியூர் தொடங்கி, மணலி, மாதவரம், கொளத்தூர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூர் என திருவல்லிக்கேணி வரை மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இன்று தீபாவளி விடுமுறை என்பதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், உணவு டெலிவரி உப்பட டெலிவரி தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தவிர சாலை ஓர வியாபாரிகளின் வாழ்க்கையும் கடுமையாக பாதிப்பு உள்ளானது.
இப்படி இருக்கையில், அடுத்த சில மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. எனவே வெளியில் செல்லும் மக்கள் இதற்கான முன்னேற்பாடுடன் சென்றால் மழையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications