சூறைக்காற்று + கனமழை.. சென்னையில் இரவில் வெளுத்து வாங்கும் மழை! மின்தடை - வாகன நெரிசலால் அவதி
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவும் நிலையில் நள்ளிரவிலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பல இடங்களில் மழை பெய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்யும்.

ஆனால் தற்போது சாரல் மழை என்பது அவ்வப்போது மட்டும் லேசாக பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் கணித்து இருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று இரவு சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது. இரவு 8.30 மணி முதல் லேசாக பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னை அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்ஐசி, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராஜ நகர், வடபழனி, சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதே போல தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று கடுமையாக வீசியதால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அதேபோல் டூவீலர்களில் சாலையில் சென்றவர்களும் பிரச்சனையை சந்திக்க தொடங்கினர்.
அதோடு இன்று வெள்ளிக்கிழமையாகும். இதனால் ஐடி ஊழியர்கள் உள்பட பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பறப்பட்டனர். இதனால் சென்னை அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கு நடுவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கார்களில் பயணித்தவர்களும் பிரச்சனையை சந்தித்தனர்.
இதற்கிடையே தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை உள்பட 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட 28 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications