மதியம் 1 மணி வரை மழை விடாது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் மேக மாறுபாடு காரணமாக சென்னையில் நேற்று விடியற்காலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று காலை ஓக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், ஈஞ்சம்பாக்கம் மற்றும் ஆர் ஏ புரத்தில் 11 செ.மீ மழையும், அடையாறில் 10 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவானது.

இந்த நிலையில், சென்னையில் இன்றும் அதிகாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்லிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில், மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Light to Moderate Rain is likely to occur at isolated places over Chengalpattu, Chennai, Kancheepuram, Thiruvallur, Nagappattinam and Ramanathapuram in next 3 hours. pic.twitter.com/j9U2h3Lo30
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 23, 2025
"சனிக்கிழமைக்கு பிறகு மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது ஈரப்பதத்தை இழுத்து, மழையை அந்த பகுதியை நோக்கி நகர்த்தும். இதனால் சென்னையில் மழை குறையும். அதிகாலை மழைக்கு ஆழ்ந்த வெப்பச்சலனமே காரணம். இது கடற்கரை பகுதிகளில் மழையின் தீவிரத்தை அதிகரித்தது" என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications