கோவைக்கு குறி.. குமரியும் தப்பவில்லை! அடுத்த 2 மணி நேரத்தில்.. 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கோயம்புத்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலை பகுதிகள், திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழை பெய்யும்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நேற்று தமிழகம் முழுவதற்குமான வானிலை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன்.26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.29 முதல் ஜூலை.1ம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று (26-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications