காலையிலேயே 8 மாவட்டங்களில் வெளுத்தெடுக்கப்போகுது மழை.. 10 மணி வரை அலர்ட்டா இருங்க மக்களே!
சென்னை: இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் மாவட்டங்களில் இன்று லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இடங்களில் மழை
நேற்று கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் மழை கொட்டியது. இந்த மாவட்டங்கள் மழையால் குளிர்ந்த நிலையில், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெயிலில் வாடின. நேற்று விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல தஞ்சை, சிவகங்கை, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கோடை மழையால் குளிர்ந்தன.
தஞ்சாவூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இதேபோல, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குளிர்வித்த கோடை மழை
சிவகங்கை நகர்ப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிரங்கால், பையூர், வாணியங்குடியிலும், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதனிடையே, இன்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக, சாத்தான்குளம், திற்பரப்பு, உத்தமபாளையம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், பேச்சிப்பாறை, மணியாச்சியில் தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.
இன்றும் மழை பெய்யக்கூடும்
தென்மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
அடுத்த 3 மணி நேரத்தில்
இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் மாவட்டங்களில் இன்று லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை முதல்
நாளை முதல் மே 2 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் நிலவரம்
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
குறிப்பாக, மதுரை, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications