அடிச்சு தூக்கும் வெப்பத்திற்கு பிரேக்.. தென் தமிழகம்+ டெல்டாவில் 4 நாள் நல்ல மழை! அப்போ சென்னை நிலை?
சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு பிரேக் விடும் வகையில் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்குக் கணிசமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிப். மாதம் முதலே மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பெரியளவில் எங்கும் மழை இல்லாத நிலையில், வறண்ட ஒரு வானிலையே நிலவி வருகிறது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வானிலை எப்படி இருந்தது.. வரும் நாட்களில் எப்படி இருக்கும். மழைக்கு எந்தளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வானிலை: கடந்த 24 மணி நேரரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதன் காரணமாக மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும் பெரியளவில் மழை பெய்யவில்லை.
அதிகபட்ச வெப்பத்தைப் பொறுத்தவரைத் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 4.6° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. தமிழக உள் மாவட்டங்களில் பத்து இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வெப்பம்: அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.3° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: மேலும் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை பகிர்ந்த செய்திக்குறிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று ஏப்ரல் 8 மற்றும் நாளை ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 11ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நல்ல மழை: ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.
வெப்ப அலை: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications