உருவான ஆழ்ந்த காற்றழுத்தம்! கடலூர், மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலவில் வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரமாக ஒரே இடத்தில் நீடித்து வந்த நிலையில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இலங்கை - தமிழகம் இடையே நகர்ந்து வருகிறது.

மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நாளை தென்மேற்கு பகுதிகளில் இலங்கையில் தமிழக கடலோரத்தை நெருங்கும். இந்த காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு குறைவு என சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். அது போல் நாளை டிசம்பர் 11 ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications