சென்னையே நனையுது மழையில்.. பவர் கட் வேற.. நாளையும் பொது விடுமுறையா? தமிழக அரசு சொன்ன தகவல் பாருங்க
சென்னை: மக்கள் அவசியமின்றி வெளியேற வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், நாளையும் பொதுவிடுமுறை இருக்குமா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. இந்த மிக்ஜம் புயல் காரணமாக, சென்னையில் மழை கொட்டி வருகிறது.. இதனால், சென்னையே மொத்தமாக முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது..

புயல்: சென்னையை புயல் நெருங்கி வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிலிருந்தே பலத்த மழை பெய்து வருகிறது.
புயல் கரையேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவெல்லாம் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்ததால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகள், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது...
வேகம் மிகுந்த வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
வடபழனி 100 அடி சாலையில் பெரிய மரம் சாய்ந்து விழுந்துள்ளதால், போக்குவரத்து அந்த பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர்: சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மழைநிர் தேங்கியிருப்பதால் மூடப்பட்டிருக்கிறது.. காலை 8 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.. சென்னை ஏர்போர்ட்டில் நள்ளிரவிலிருந்தே மழை பெய்து வருகிறது.. இதுவரை வந்த 8 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.. இந்த கனமழையால் மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையே மூழ்கிவிட்டது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், மிக அதிக அளவு மழையை ஒரே நாளில் சென்னைக்கு கிடைத்துள்ளதாம்.. இதுவரை தண்ணீர் தேங்காத பகுதிகளில் கூட, இந்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
அம்பத்தூர்: குறிப்பாக, அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதில், வளசரவாக்கத்தில் மிக அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. அதாவது வளசரவாக்கம் 203.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. சோழிங்கநல்லூரில் 177.3 மழை பெய்துள்ளது. சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜிஎஸ்டி சாலை, மழை நீரில் மூழ்கியுள்ளது.
நிறைய குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் சென்னையில் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளும் துவங்கி உள்ளன.
பாதுகாப்பு: இதனிடையே, தமிழக வருவாய்த் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கூறும்போது, "சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால்தான் இந்த அளவுக்காவது மக்கள் இயல்பாக வெளியே வரமுடிகிறது... 10 சதவீத பணிகளே மிச்சமுள்ளதால், அதை விரைவில் முடிக்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.. அதையும் செய்வோம்.
சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியேற வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்..." என்றார்.
அப்போது, இன்று 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளையும் பொதுவிடுமுறை இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ராமச்சந்திரன், "புயல் கரையை கடந்து விடும் என தெரிகிறது.. எனவே, இன்று மாலைக்கு மேல் மழை குறையும் என்பதால் நாளை விடுமுறை விடுவதற்கான அவசியம் இருக்காது என்றே கருதுகிறோம்" என்றார்.
மேயர் பிரியா: அதேபோல் சென்னை மேயர் பிரியா பேசும்போது, மழை நின்ற பிறகு கால்வாய்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறும்" என்று உறுதி தந்துள்ளார் மேயர்.
தற்போது சென்னையை பொறுத்தவரை வரலாறு காணாத மழை பெய்துள்ளது.. எனவே, பெரும்பகுதிகள் மழையால் சூழ்ந்துள்ளன.. மழையால் ஏற்பட்ட இந்த வெள்ள நீர், வடிந்து இயல்பு நிலை திரும்பவே சில நாட்கள் ஆகும் என்பதால், நாளையும் விடுமுறை விட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications