அடிக்கிற குளிரில் மழை வேறயா! இரவு 10 மணி வரை சென்னை+3 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்திருக்கிறது. இந்நிலையில் இரவு 10 மணி வரை சென்னை உட்பட 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி இன்று வரை சராசரியாக 57.5 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில் 43.3 செ.மீதான் மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் இப்போது பெய்த மழை இயல்பை விட 33% அதிகமாகும். அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 118.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 31% அதிகமாகும். இரண்டாவதாக சென்னையில் 102.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதுவும் இயல்பை விட 31% அதிகமாகும்.

ஒப்பீட்டளவில் திருப்பத்தூரில் 85%, கிருஷ்ணகிரியில் 85%, விழுப்புரத்தில் 65%, திருநெல்வேலி, சேலத்தில் 63%, தருமபுரியில் 60% என இயல்பை விட அதிக மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மழையை பொறுத்த வரை, “நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.24) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. வடதமிழக மேலும் இது, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக்கூடும்.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தொடங்கி டிச.30ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும் நாளையும் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.26 முதல் டிச.28 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: இன்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.25ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.26 முதல் டிச.28 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications