Chennai Rain : வங்கக் கடலில் காற்றழுத்தம்!ஆகஸ்ட் 7ல் சென்னை டூ திருப்பதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: வங்கக் கடலில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 7ஆம் தேதி வாக்கில் குடை, ரெயின் கோட் அவசியம் மக்களே மறந்துடாதீங்க!

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 7ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது. வடதமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக வானிலை மையம் வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 6ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 2,3) தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் தூத்துக்குடி- 101.84, நாகை, திருச்சி தலா 101.3, மதுரை நகரம்- 101.12, பரமத்தி வேலூர், தஞ்சை தலா 100.4 என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.












Click it and Unblock the Notifications