Chennai Rain: சென்னையில் திடீரென மாறிய கிளைமேட்.. அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டும்.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுர, செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் இருக்கிறது. பருவமழை தொடங்கும்போது கனமழையுடன் முன்கூட்டியே தொடங்கியது. இதனால் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட மழை அதிகமாகவே இருந்தது.

டிசம்பரில் குறைந்த மழை
நவம்பர் மாதத்திலும் தொடக்கத்தில் மழை பெய்யவில்லை என்றாலும், கடைசி இரு வாரங்கள் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை விடாமல் வெளுத்து வாங்கியது. டிட்வா புயல் காரணமாக டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழை தொடர்ந்தது. டிட்வா புயலுக்கு பிறகு தமிழகத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை.
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலுமே மழை பெய்தது. மற்றபட டிசம்பர் மாதத்தில் இயல்பை விட மழை மிக குறைவாகவே பதிவாகியுள்ளது. இன்றோடு டிசம்பர் முடிவடையும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம் அறிவித்தது போலயே தென்காசி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கிளைமேட் அப்படியே மாறியது. வெயில் அடித்து கொண்டிருந்தநிலையில் திடீரென மேகம் சூழ்ந்து நாகையில் லேசான மழை பெய்தது. சென்னையிலும் மாலையில் திடீரென கிளைமேட் மாறியது. மழை பெய்வது போல் கருமேகம் திரண்டு காட்சியளிக்கிறது.
இன்றும் நாளையும் எப்படி?
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை புத்தாண்டு அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தது.
மேலும் வரும் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை மற்றும் மாலையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications