இரவு நேரங்களில் உருவாகும் பலத்த காற்று! சென்னையில் வெளுக்கும் மழைக்கு காரணம் என்ன? சென்னை ரெயின்ஸ்!
சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் மழைபெய்து வருவதற்கு காரணம், இரவு நேரங்களில் உருவாகும் பலத்த காற்று என சென்னை ரெய்ன்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்துவிட்டது. இனி ஆடி மாதம் தொடங்கினால் ஆடி காற்றால் அம்மிக்கல்லும் நகரும் என்பார்கள். ஆனால் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தென் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் மழை பெய்து வருகிறது.

கேரளாவில் கனமழை முடிந்த நிலையில் சென்னையில தற்போது மழை தொடங்கிவிட்டது. நேற்று மாலை முதலே சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. மேற்கு திசையின் வேறுபாடு காரணமாக இந்த மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து சென்னைவாசிகளின் மனங்களும் குளிர்ந்தன.
அது போல் மாங்காடு, பூந்தமல்லி, கரையான்சாவடி, நசரத்பேட்டை, குமணன்சாவடி உள்ளிட்ட இடங்களில் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. சென்னையை பொருத்தம்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடி மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
பெரும்பாக்கத்தில் பலத்த காற்றுடன் மிக அதிக கனமழை பெய்தது. இந்த காட்சிகளை பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. இதுகுறித்து சென்னை ரெய்ன்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென் சென்னையில் மிகவும் பலத்த மழை பெய்தது. அது போல் தென் புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான். இரவு நேரங்களில் புதிய காற்று உருவாகலாம் என தெரிவித்துள்ளது.

வடசென்னையில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும். காலை நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை ரெயின்ஸ் குறிப்பிட்டுள்ளது. வடதமிழகத்தில் நேற்றைய தினம் நிறைய இடங்களில் மழை பெய்தது. அது போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இன்று கடலூர்- மகாபலிபுரம் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்மார், திருவொற்றியூர், ஒட்டியம்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. பல்லாவரம் பகுதியில் கும்மிருள் சூழ்ந்து கொண்டு மழை பெய்தது. மாடம்பாக்கத்தில் மழை வெளுத்து வாங்கியது. அத்துடன் சூறைகாற்றும் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications