சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு! பெற்றோர் அவதி! போக்குவரத்தும் பாதிப்பு
சென்னை: சென்னையில் காலை முதலே மழை பெய்து வரும் நிலையில் சில தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் அவதியடைந்து வருகிறார்கள்.
டிட்வா புயலால் நேற்று சென்னைக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில இடங்களில் வானம் தெளிவாகவும் லேசான ஊமை வெயிலும் இருந்தது. இந்த நிலையில் டிட்வா புயலானது வலுவிழந்துவிட்டதால் சென்னையில் நேற்று அந்த அளவுக்கு மழை இல்லை.

எனினும் இரவு நேரத்தில் ஓரளவுக்கு பெய்தது. அந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறினாலும் சென்னைக்கு அருகே இரு நாட்கள் தங்கியிருக்கும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து குளிர்காற்று நிலவி வருகிறது. தொடர்ந்து மழை விடாமல் பெய்து வருவதால் சென்னையில் சில பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு அறிவித்ததால் அங்கு ஒரே நேரத்தில் பெற்றோர் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளும் மழை நீரில் கால் வைத்தபடியே குளிரில் நடுங்கி செல்கிறார்கள். காலையிலேயே விடுமுறை விட்டிருக்கலாம் என சில பெற்றோர் பேசிக் கொண்டனர். இந்த செய்தி ஊடகங்களில் பரவியதால், நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்குமோ என பெற்றோர் கிடந்து தவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications