பொளந்து கட்டும் மழை! கன்னியாகுமரி, நெல்லைக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக மோசம்! வார்னிங்
தூத்துக்குடி: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அடுத்த 48 மணி நேரம் என்பது சற்று மோசமான மழையை கொடுக்கும் நேரம் என சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நெல்லையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுவரை அதாவது இன்று காலை 6.30 மணி வரை 323.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட 18 இடங்களில் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னடியன் கால்வாய், களக்காடு பகுதிகளில் 33 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 31 மில்லி மீட்டர் மழையும் அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையின் அளவு 125.20 அடியை எட்டியுள்ளது. அது போல் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே நீர் நிலைகளில் பொதுமக்கள் இறங்கவோ செல்பி எடுப்பதோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலும் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை ரெயின்ஸ் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சற்று மோசமான நிலைதான்.
இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்த்துவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மிக்ஜாம் புயலின் போது பெய்த மழையை போல் அந்த மாவட்டங்களில் பெய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்திற்கு அதிகமான மழைப் பொழிவை கொடுக்கும். சில இடங்களில் 20 செமீட்டருக்கு மேல் மழை பெய்யும். தென் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல்லின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தமிழ்நாட வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications