சென்னையில் வானிலை இயல்புக்கு திரும்பியது.. 104 டிகிரி கொளுத்திய வெயில்! காரணம் இதுதான்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவு இதமான வானிலை நிலவி வந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். ஆனால், இன்று இந்த ஆண்டில் முதல் முறையாக வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெளியில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் இன்று சென்னையில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், “சென்னை நுங்கம்பாக்கம் இந்த ஆண்டில் இது வரை 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை. அதிகபட்சமாக மே 1ம் தேதி 39 டிகிரி செல்சியஸாக (102 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியிருந்தது. இன்று 40.4 டிகிரி செல்சியஸை (104.72 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் கடந்திருக்கிறது.
மீனப்பாக்கத்தல் இதேபோன்று வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 2018 மற்றும் அதற்கும் முன்பு 2004ம் ஆண்டில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக பதிவாகியிருந்தது" என்று கூறியுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்தான் இந்த வெயிலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் கடந்த 26ம் தேதி காலை புயலாகவும் மாறியது. வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, புயல் தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்தது.
இது நேற்று காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் மெல்ல நகர்ந்து நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையே கரையை கடந்தது. புயல் ஓரிடத்தில் உருவாகிறது எனில், சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மழை மேகங்களை இழுத்துக்கொள்ளும். அப்படித்தான் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக உருவாகியிருந்த மழை மேகங்களை புயல் இழுத்து சென்றிருக்கிறது. எனவேதான் சென்னையில் வெயில் 104 டிகிரி பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications