சென்னையில் 100 டிகிரி நெருங்கிய வெயில்.. ஆண்டின் மிக வெப்பமான நாள் நேற்றுதானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் ஏறத்தாழ 100 டிகிரிக்கு நெருக்கமாக வெயில் பதிவாகியிருக்கிறது. ஆண்டின் மிக வெப்பமான நாளாக நேற்றுதான் இருந்தது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது சென்னையில் நேற்று பரவலாக வெப்ப அலையின் தாக்கமும் இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடக்கத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் வெயில் பொளக்க தொடங்கிவிட்டது. வெயில் காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினத்தை பொறுத்த அளவில் 8 இடங்களில் வெயில் சதமடித்திருந்தது. குறிப்பாக சென்னையில் பதிவான வெயில், இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் என்று சொல்லப்படுகிறது. மாவட்டவாரியாக பார்த்தால்..
ஈரோடு - 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்
பரமத்திவேலூர் - 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் - 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்
வேலூர் - 100.56 டிகிரி ஃபாரன்ஹீட்
திருப்பத்தூர் - 100.56 டிகிரி ஃபாரன்ஹீட்
சேலம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட்
திருச்சி - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட்
சென்னை மீனம்பாக்கம் - 99.86 டிகிரி ஃபாரன்ஹீட்
சென்னை நுங்கம்பாக்கம் - 97.52 டிகிரி ஃபாரன்ஹீட்
என வெயில் பதிவாகியுள்ளது. இதுவரை சென்னையில் பதிவான வெயிலில், நேற்று பதிவான வெயில்தான் அதிகம். நேற்று சென்னையில் இயல்பை விட 3.6-4.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயில் இப்படித்தான் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக இதயநோய் கொண்டவர்கள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு சில இடங்களில் வெப்ப அலையும் வீசியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெயில் அதிகமாக இருப்பதால் புறஊதாக்கதிர்களின் தாக்கமும் தீவிரமாக இருக்கும். எனவே, வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஜன்னல்கள், கதவுகளை அடைத்து வைத்திருப்பது சிறந்தது. அதேபோல நீர் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். டீ, காபியை விட பழச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்தது. மோர், கூழ் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
வெளியில் செல்வோர் கட்டாயம் தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்து செல்ல வேண்டும். அடர் நிறத்தில் ஆடைகளை அணிவதை விட, வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிறத்தில் ஆடைகளை அணிந்தால் வெயிலின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications