சென்னைவாசிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு துணி துவைக்கலாமா? வானிலை எப்படி இருக்கும்? வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையின் தாக்கும் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் சென்னையின் வானிலை குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி அப்படியே கொஞ்சம் கீழே போனால் தென்காசி, திருநெல்வேலி கடைசியாக கன்னியாகுமரி என மழை கடந்த சில நாட்களாக பொளந்தது எடுத்தது. ஆனா பக்கத்து ஊர் தூத்துக்குடி என்ன பாவம் பண்ணுச்சோ! மழை எட்டி கூட பாக்கல.

அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 67.2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் சராசரியாக 372.3 மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பதிவாகி இருக்க வேண்டும். அந்த வகையில் 63% அளவுக்கு இயல்பிலிருந்து கூடுதலாக இம்மாவட்டம் மழையை பெற்றிருக்கிறது.
இதே போல நீலகிரி மாவட்டத்திலும் 558.2 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இந்த மாவட்டத்தில் இயல்பான மழை விட 34% அதிகமாகும். தேனி மாவட்டத்தில் 152.4 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்திருக்கிறது. இது 96% அதிகமாகும். அதே போல தென்காசி மாவட்டத்தில் 193.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது இது 126% அதிகமாகும்.
திருநெல்வேலியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் வேறெந்த மாவட்டங்களை காட்டிலும் இங்குதான் இந்த காலகட்டங்களில் அதிகமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதாவது இயல்பை விட 350% அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. சோகம் என்னவெனில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெறும் 0.4 மட்டுமே மழை பெய்திருக்கிறது.
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். தரைக்காற்று 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும். மற்றபடி 30ம் தேதி தொடங்கி அடுத்த 3ம் தேதி வரை, சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை இன்று (28-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (29-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
37 டிகிரி செல்சியஸ் என்பது ஏறத்தாழ 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம். அதேபோல மழைக்கான எச்சரிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் சென்னை மக்கள் காலையில் துணியை தோய்த்து காயபோட்டுவிட்டு, மதியமே எடுத்துவிட வேண்டும். மாலை நேரங்களில் மழை லேசாக வந்து மொத்த துணியையும் நனைத்துவிட வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications