சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்த 5 மாவட்ட மக்கள் உஷாரா இருக்கனும்! - வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று, சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.

இன்றும் நாளையும் மழை
எனவே இன்று, (ஜன.11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜன.12) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.13 முதல் 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (11-01-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications