மொத்தமாக நனைந்த சென்னை.. நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையின் வானிலை இதமானதாக மாறியிருக்கிறது. அதேபோல மழை இன்று நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை சென்னையில் மட்டும் 522.3 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தில் இயல்பாக 386.8 மி.மீ அளவுக்கு மழை பதிவாக வேண்டும். அதன்படி தற்போது பெய்திருக்கும் மழையின் அளவு இயல்பை விட 35% அதிகமாகும்.

முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று (20-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 295.4 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையை விட 5% அதிகமாகும். அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 255.9 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் இது இயல்பை விட 254% அதிகமாகும். சென்னையில் 35%, கோயம்புத்தூரில் 41%, மயிலாடுதுறையில் 67%, ராணிப்பேட்டையில் 52%, தென்காசியில் 62%, திருப்பத்தூரில் 31%, திருவள்ளூரில் 38%, திருவாரூரில் 19% மற்றும் வேலூரில் 48% அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications