மனம் கலங்குகிறது! திருச்செந்தூரில் 12 மணி நேரத்தில் 500 மி.மீ. பேய் மழை! சென்னையே தேவலை போலயே!
சென்னை: உண்மையில் சொல்ல வேண்டுமானால் சென்னை பெருவெள்ளத்தை விட தூத்துக்குடி மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
குமரி கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அந்த இடத்தை விட்டு 5 கி.மீ.வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

அது போல் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள அணைகள், நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனால் அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் சில கன்மாய்கள், ஓடைகள் உடைந்துவிட்டன. தண்ணீர் வெளியேறும் கால்வாய்களும் சாதாரண மழைக்குத்தான் தண்ணீரை வெளியேற்றும் என்றும் தற்போது பெய்யும் பேய் மழையால் ஏற்படும் வெள்ளத்தை வெளியேற்றும் திறன் அந்த சிறிய கால்வாய்களுக்கு இல்லை என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் மழை நீர் வந்துள்ளது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தென்காசியில் நேற்று காலை முதல் 20 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் 10.30 மணி வரை பெய்த மழையின் அளவை கொடுத்துள்ளது.
No words to say! I am just stunned...😟
— Chennai Weatherman (@chennaisweather) December 17, 2023
Mind boggling numbers coming from Manimuthar and Tiruchendhur crosses 500mm all in a span of 12-14hrs.
Honestly this is far far big than what Chennai has seen recently.
And the bad news is more deluge rains are expected Sincere… pic.twitter.com/LUqkaY8nkt
அது பின்வருமாறு:
தூத்துக்குடி தாலுக்காவில் தூத்துக்குடியில் 124 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 525 மி.மீ., திருச்செந்தூர் தாலுக்காவில் திருச்செந்தூரில் 507 மி.மீ. காயல்பட்டினத்தில் 599 மி.மீ. குலசேகரபட்டினத்தில் 214 மி.மீ. மழையும் சாத்தான்குளம் தாலுக்காவில் சாத்தான்குளத்தில் 348 மி.மீ., கோவில்பட்டி தாலுக்காவில் கோவில்பட்டியில் 318 மி.மீ, கழுகுமலையில் 92 மி.மீ., கயத்தாறு தாலுக்காவில் கயத்தாற்றில் 180 மி.மீ., கடம்பூரில் 217 மி.மீ. பெய்துள்ளது.
அது போல் எட்டயபுரம் தாலுக்காவில் எட்டயபுரத்தில் 93.90 மி.மீ. மழை, விளாத்திகுளம் தாலுக்காவில் விளாத்திக்குளத்தில் 103 மி.மீ. மழையும் கடல்குடியில் 40 மி.மீ. மழையும், வைப்பாறில் 85 மி.மீ மழையும். சூரன்குடியில் 72 மி.மீ., ஒட்டப்பிடாரம் தாலுக்காவில் ஒட்டபிடாரத்தில் 134 மி.மீ., மணியாச்சியில் 235 மி.மீ., வேதாநத்தத்தில் 65 மி.மீ. மழையும் கீழரசடியில் 83 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
அதாவது இந்த டேட்டாவில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சாத்தான்குளம், கோவில்பட்டி, கடம்பூர், மணியாச்சி ஆகிய இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. மேலும் கயத்தாறு, ஒட்டபிடாரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பார், சூரங்குடி, வேதாநத்தம், கீழரசடி ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்தது. கடல்குடியில் மிதமான மழை பெய்தது.
இந்த டேட்டாவை வைத்து சென்னை வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சொல்வதற்கு வார்த்தையே இல்லை. நான் மிகவும் பிரமித்துள்ளேன். மணிமுத்தாறு மற்றும் திருச்செந்தூரில் 12 முதல் 14 மணி நேரத்தில் 500 மி.மீ. மழை பெய்துள்ளது மனதை கலங்கடிக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டுமானால் சென்னையில் அண்மையில் நாம் பார்த்த மழையை விட இது பெரிய மழை. இதில் கெட்ட செய்தி என்ன என்றால் இந்த பகுதிகளில் மேலும் கனமழை பெய்யக் கூடும். அங்குள்ள மக்களுக்கு நமது பிரார்த்தனைகள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications