சென்னை+9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. திடீரென கொட்டப்போகும் மழை! அடுத்த 3 மணி நேரம் முக்கியம்
சென்னை: சென்னையில் இன்று காலை தொடங்கி வானம் மேக மூட்டத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நேரத்தில் சென்னையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மட்டுமல்லாது மேலும் 9 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கான பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,

சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
கடலூர்
அரியலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
என 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்றும் நாளையும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.12ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜன.13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.14 தொடங்கி 16ம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications