சென்னையை புரட்டிப்போட்ட பெருமழை.. வடியாத வெள்ளத்தால் வாடிய மக்கள்.. உதவிக்கரம் நீட்டிய முதல்வர்
சென்னை: தென் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், நிவாரண பொருட்களை வழங்கினார். அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் மையம் கொண்டதால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை இரவு வரைக்கும் இரண்டு நாட்களில் 73 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் 3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணையில் மட்டுமே 2 நாட்களில் வரலாற்றில் கேள்விப்படாத வகையில் 73 செ.மீ. அளவுக்கு பெய்து மக்களை நிலை குலைய வைத்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. உண்ண உணவு இன்றி குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றன. மின்சாரம் இல்லை, செல்போன்களில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேற்றைய தினம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல், மழைநீரை அகற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும் என பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் புயலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, யாரும் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்து, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார்.
இதனிடையே பெரு மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், தாம்பரம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். இன்றைய தினம் தரமணி, பெருங்குடி உள்ளிட்ட மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். போர்வை, அரிசி, பிஸ்கட், ஆவின் பால் பவுடர் போன்ற பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications