முதலமைச்சர் தூங்கமாட்டார்.. நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும்.. வைரமுத்து பாராட்டு
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், முதலமைச்சர் தூங்கமாட்டார், நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட அந்த புயல் சென்னை தண்ணீரால் தத்தளிக்க வைத்துவிட்டு ஆந்திராவில் இன்று பிற்பகலில் கரையைக் கடந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று கடந்து சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னையில் பெய்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.
திரும்பிய பக்கம் எல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கூட மழை நீர் ஆறு போல இழுத்து ஓடியது. தெருவுக்குள் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிக்ஜாம் புயல் பந்தாடிவிட்டது. ஒருவழியாக நேற்று இரவு மழை குறையத் தொடங்கியது.
வைரமுத்து பாராட்டு: மழை விட்டதுமே மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. மாநகராட்சி பணியாளர்கள் இரவே பல இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மின் விநியோகமும் இரவே பல இடங்களில் சீர் செய்யப்பட்டது. மீட்பு பணிகளுக்காக முழு வீச்சில் தமிழக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்வரும் நேரடியாக மீட்பு பணிகளை கண்காணித்து அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
வெளி மாவட்டங்களில் இருந்தும் தூய்மை பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் தூங்கமாட்டார்: முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அவர் துடிப்பையும் துயரத்தையும்
புரிந்து கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும்
களப் பணியாளர்களும் படையாக இணைந்தார்கள்; குடையாக நனைந்தார்கள்
அவர்களின் நற்றொண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியது,
மழை ஓய்ந்த பிறகும், அவர்கள் ஓய்ந்தாரில்லை, இயற்கை ஒரேநாளில் சவால் விடுகிறது மனிதன்தான் பலநாள் போராடுகிறான், இறுதி வெற்றி மனிதனுக்குத்தான்
திறமையோடும் தீவிரத்தோடும், அரும்பணி ஆற்றுவோரைப் பாராட்டுகிறோம், விமர்சனங்களை விடுங்கள், இது மீட்சிக்கு ஓர் ஆட்சி என்று நடுநிலையாளர் நற்சான்று தருவர்,
முதலமைச்சர் தூங்கமாட்டார், நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும்.. இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications