மிதக்கும் சென்னை.. நிவாரண பணிகள் தொடர்பாக நள்ளிரவில் நடந்த ஆலோசனை.. அதிகாரிகள் பங்கேற்பு
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரமாக விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. மழை குறைந்து வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வரும் நிலையில், வெள்ள நிவாரணம், மீட்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் நள்ளிரவில் ஆலோசனை நடந்தது.
வங்க கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தற்போது சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் தீர்த்து விட்டு தற்போது ஆந்திராவை நோக்கி நடையை கட்டி இருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னை மாநகரில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பேய்மழை கொட்டியது. நேற்று இரவு சுமார் 11 மணி வரை இடைவிடாமல் கனமழை வெளுத்தது.

சென்னையில் கடந்த 35 மணி நேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. விடிய விடிய 2 தினங்களாக பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் முக்கிய சாலைகளும் ஆறு போல மாறின. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் ஆலோசனை: விடாது மழை பெய்து கொண்டே இருந்ததால் மழை எப்போது விடத்தொடங்கும் என்று பார்த்துக் கொண்டு இருந்தனர். மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீட்டர் தூரம் தள்ளி சென்றது. 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த நிலையில் சென்னையை விட்டு விலகி சென்றுள்ளது மிக்ஜாம் புயல். தற்போது ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தற்போது சென்னையில் மழை குறையத் தொடங்கியுள்ளது.
நள்ளிரவில் மழை குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் வெள்ளநீர் வடிய தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்ததாலும், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நள்ளிரவில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
15 ஆயிரம் பேர் மீட்பு: தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான வகையில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை அரசு கொடுத்து வருகிறது. இதுவரை 4 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications