வெள்ளம் வடிந்தது! வீட்டை சுத்தம் செய்ய கட்டணத்தை டபுளாக்கிய தனியார் நிறுவனம்.. விழிபிதுங்கும் மக்கள்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனம் ஒன்று அதற்கான கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீர் வந்துவிட்டதால் மக்களால் முன்னெச்சரிக்கையாக எதையும் செய்ய முடியவில்லை.

இதனால் வீடுகளில் இருந்து கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வீட்டை சுற்றி வெள்ளம் வடிந்த நிலையில் வீடுகளில் படிந்துள்ள சேறு, மணல், குப்பை, பாசிகளை தூய்மைப்படுத்துவது மக்களுக்கு சவாலான காரியமாக இருக்கிறது.
வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்துவிட்டதால் சுத்தம் செய்வது கடினம் என்ற நிலை இருக்கிறது. இதை கிருமி நாசினி கொண்டுதான் சுத்தப்படுத்த வேண்டும். இதனால் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனத்தை அணுகியுள்ளனர். நிறைய பேர் இது போல் அணுகியதால் சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை 2 மடங்காக அதிகரித்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் இதற்கு முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ 3 ஆயிரம் முதல் ரூ 4 ஆயிரம் வரை வசூலித்தனர். தற்போது அந்த கட்டணத்தை ரூ 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த கட்டணம் ஆன்லைனில் புக் செய்யும் போதே தெரிந்துவிடுவதால் பலர் என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதிலும் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், காரப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். மற்றவர்கள் ஆன்லைனில் விலையை பார்த்துவிட்டு நாமே சுத்தம் செய்து விடலாம் என களத்தில் இறங்கிவிட்டனர்.
வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பதால் வேறு வழியின்றி அந்த துப்புரவு நிறுவனங்களை நாடுகிறார்கள். இது போல் சாக்கடை நீர் தேங்கிய இடங்களில் சுத்தம் செய்யும் போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications