கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை.. சிங்காநல்லூர், காந்திபுரத்தில் அடியோடு மாறிய காட்சிகள்
கோவை: கோவையில் காந்திபுரம், பீளமேடு, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையில் சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரமே வெப்பம் தணிந்து குளிர்ச்சியமாக மாறி உள்ளது. கோவையில் நேற்று மாலையும் நல்ல மழை பெய்தது. கோவையில் இடையர்பாளையம், பேரூர், கோவைப் புதூர், சாடிவயல், ஆலாந்துறை, கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், தடாகம் ரோடு,காருண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நேற்று சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பரிதவித்து போனார்கள். அவர்கள் தங்களின் வாகங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு பேருந்து நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். கனமழை காரணமாக கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் மழைநீர் குளம் போல் தேங்கியதால், வாகனங்கள் மழைநீரில் பாதி அளவு மூழ்கின. வாகனங்களில் தண்ணீர் புகுந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கோவை கணுவாய் வெள்ளக்கிணறு, துடியலூர், குருடம்பாளையம் தொப்பம் பட்டி பன்னிமடை, வரப்பாளையம் சோமயம்பாளையம், நஞ்சுண்டா புரம், சின்னத்தடாகம், பெரியதடாகம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. கோவை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வறண்டு கிடந்த கோவை குற்றால அருவி, சிறுவாணி மலையடிவாரம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாநகரில் ஓடும் நொய்யல் ஆற்றில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.
கோவையில் கனமழை பெய்து வருகிறது...
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) May 18, 2024
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடிய மேற்கூரை சரிந்தது. #coimbatore #Rain pic.twitter.com/3j6IChvu5b
இன்றும் நேற்று போல் கோவை மாநகரம் முழுவதும் பலத்த மழை பெய்த காரணத்தால், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காந்திபுரம், பீளமேடு, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை கோவை மட்டுமின்றி கோவையின் புறநகர் பகுதியிலும் பெய்தது. இந்த மழையால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடிய மேற்கூரை சரிந்தது. இதேபோல் சிங்கநல்லூர் பேருந்து நிலையம் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் கோவையே குளுகுளுவென மாறி உள்ளது. அடித்த வெயில் எல்லாம் எங்கே போனது என்று கேட்கும் அளவிற்கு கோவையில் மழை வெளுத்து வாங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications