கோவையை ஏமாற்றிய ஃபெஞ்சல்.. ஏன் புயல் மழை பெய்யவில்லை.. வெதர்மேன் அப்டேட்
கோவை: ஃபெஞ்சல் புயல் கொங்கு மண்டலம் வழியாக கரையைக் கடப்பதால் கோவையில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை என்று கூறப்பட்டு வந்த நிலையில், போக்கு காட்டிய புயல் சின்னத்தால் கன மழை கூட பெய்யவில்லை. இந்நிலையில், கோவையில் புயல் மழை ஏன் ஏற்படவில்லை என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி கடல்போல காட்சியளிக்கின்றன. சென்னை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் கொங்கு மண்டலம் வழியாக கரையைக் கடப்பதால் கொங்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புயல் மழை பெய்யும் என்று கூறப்பட்டது.

47 ஆண்டுகளுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்யப் போவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். ஆனால், இந்தப் புயல் இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்ததாலும், ஒரே இடத்தில் நீடித்து வலுவிழந்து காணப்படுவதாலும் கொங்கு மண்டலம் புயல் மழையில் இருந்து தப்பித்துள்ளது. அப்படியே இந்த வழியாக பயணித்தால் லேசானது முதல் மிதமான மழையே பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிரிஷ் கூறியுள்ளதாவது: Fengal புயல் சின்னமானது வலுவிழந்து நாம் முன்பு எதிர்பார்த்தது போல மேற்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதே தற்பொழுது சேலம் அருகே நிலை கொண்டுள்ளது. இது வரும் மணி நேரங்களில் மேற்கு / தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஈரோடு, வடகோவை, நீலகிரி வழியாக அரபிக் கடலுக்கு நாளை சென்று அடையும்.
இதனால் இன்றும் நாளையும் வட கொங்கு மண்டல பகுதிகளான ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வடகோவை, நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் கொங்கு மண்டல பகுதிகளுக்கு( திருப்பூர், திண்டுக்கல், கரூர்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை சிட்டி: கோயம்புத்தூர் சிட்டி பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் போல மழையுடன் சேர்ந்த குளுகுளு கோவையை காபி மற்றும் மிளகாய் பஜ்ஜி உடன் நாம் என்ஜாய் செய்யலாம். கொங்கு மண்டலத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் மிக மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்றும் நாளையும் நீலகிரி செல்வதை தவிர்க்கவும்.
நீலகிரி தவிர எந்த பகுதிகளுக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு வாய்ப்பில்லை. விவசாயிகளும் பொதுமக்களும் நமது வானிலை அறிவிப்புக்கேட்ப தங்களது பணியை திட்டமிட்டு கொள்ளலாம்.
கோவை புயல் மழை ஏன் வரவில்லை: இந்தப் புயல் சின்னமானது இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நீடித்து வலுவிழந்து காணப்படுவதால் புதிதாக அடர்ந்த மேக கூட்டங்களை உருவாக்க திணறி வருகிறது. இது முன்பே ஒரே இடத்தில் நீடிக்காமல் மேற்கு நோக்கி நகர்ந்து இருந்தால் நம் கொங்கு மண்டலம் முழுவதும் கனமழை கொடுத்திருக்கும். இதனால் அடுத்த 48 மணி இது வடக்கு கொங்கு மண்டலம் வழியாக பயணித்தாலும் லேசானது முதல் மிதமான மழையையே கொடுக்கலாம்.
டெல்டா மற்றும் வட தமிழகத்தில் நம் கூறியது போலவே மிக கனமழை பெய்தது. வடக்கு கொங்கு மண்டலமான சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. கொங்கு மண்டலத்தில் கடைசி நேரத்தில் இயற்கையின் அமைப்பில் சிறு மாறுதலால் நாம் எதிர்பார்ப்புக்கு மாறாக மாறி விடுகின்றன. இன்னும் 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications