மெரினா டூ உத்தண்டி வரை! அடுத்த 2 மணி நேரம் வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை ரெயின்ஸ் அப்டேட்
சென்னை: மெரினாவில் இருந்து உத்தண்டி வரை கடலோர பகுதிகளில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும் என சிஎம்ஓகே தெரிவித்துள்ளது. சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம்தான் இத்தகைய தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த மழையானது ஒரு காற்றழுத்தத்துடன் தொடங்கியது. அது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காற்றின் திசை காரணமாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது.

எனினும் சென்னையில் மிகவும் கனத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சில மணி நேரங்களில் வடிந்துவிட்டது. இந்த நிலையில் அந்த காற்றழுத்தத்தின் தாக்கம் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
அது போல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தின நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அது போல் நேற்றைய தினமும் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சென்னையில் மேக மூட்டமாக இருந்த நிலையில் நல்ல வெயில் காய்ந்தது. மாலை நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசியது. அது போல் இன்று அதிகாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்கள், குளங்கள் நிரம்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த மழை குறித்து சென்னை ரெயின்ஸ் கூறியிருப்பதாவது: சென்னையின் தென் பகுதிகளில் அடர்ந்த மேகக் கூட்டம் கிழக்கு தென் கிழக்கிலிருந்து மேற்கு தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதனால் மெரினா முதல் உத்தண்டி வரை தொடர் மழை பெய்தது. இது அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும். அப்போது அது கனமழையாக இருக்கும்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் மேல் அடர்ந்த மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. இதனால் ராணிப்பேட்டை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு அல்லது அதிகாலை வேளைகளில் நல்ல மழை பெய்யும் என்றும் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications